திருச்சி கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் ரயில்பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓடும் ரயில்களில் கல்லெறியும் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள உருமு தனலட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்வில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சுஜித்குமார் ராய், முகாமின் நோக்கம் குறித்துப் பேசுகையில்,
ஓடும் ரயில்களில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து சிறார்கள் கல்லெறியும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அவ்வாறு கல்வீசுவது குற்றச்செயலாகும். இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் காயமடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது. ரயில் பயணத்தில் ஏற்படும் அசௌகரியம் குறித்து இலவச அழைப்பு எண் 182}ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர்கள் எஸ். வள்ளிநாயகம், எஸ். மனோகரன், தலைமைக் காவலர்கள் கலைசெல்வன், எஸ். செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.