திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சிக்கியவர், தீயணைப்புப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிந்தாமணியைச் சேர்ந்த முருகேசன் (42) ஞாயிற்றுக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்றார். மணல் திட்டில் அவர் அமர்ந்திருந்த போது, நீரின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதை கவனிக்கவில்லை. மணல் திட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சென்றதால் முருகேசனால் ஆற்றில் இறங்கி கடக்க முடியவில்லை.
தன்னை காப்பாற்றுமாறு முருகேசன் சப்தமிட்டதால், பாலத்தில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று அவரைக் காப்பாற்றினர்.