புத்தாநத்தம் அருகே முகம் சிதைந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
புத்தாநத்தம் அருகிலுள்ள சின்னாகவுண்டன்பட்டியில், சேர்வை கவுண்டர் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில், மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வையம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவரை அடையாளம் தெரியாதவர்கள் கல்லைப் போட்டு கொலை செய்து, முகத்தை சிதைத்துச் சென்றது தெரிய வந்தது.
இறந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். சடலத்துக்கு அருகில் மூக்கு கண்ணாடி, நெகிழி குடிநீர்ப் புட்டிகள், மதுபாட்டில் ஆகியவை கிடந்தது. மேலும் பெண்ணின் தலையில் போடப்பட்ட கருங்கல்லும் அருகிலேயே இருந்தது. முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் இருந்ததால், அவரை அடையாளம் காண முடியவில்லை. இதுகுறித்து புத்தாநத்தம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.