தெற்கு ரயில்வேயில் வடமாநிலத்தவர்கள் அதிகமானோர் நியமிக்கப்படும் நடைமுறை விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என தட்சிஷண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச்செயலர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: தெற்கு ரயில்வேயின் திருச்சி, மதுரை உள்ளிட்ட கோட்டங்களில் அதிகமான வடஇந்தியர்கள், பயணிகள் நாள்தோறும் தொடர்பு கொள்ளும் வணிகப் பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், வடஇந்திய பணியாளர்களுடன் சரிவர தகவலை பெற முடியாமல் தென்மாநிலப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஓரிரு நாள்களுக்கு முன்பு ரயில்வே வாரியம் தெற்குப் பகுதிகளில் கடைநிலை பணிகளுக்கென 219 பேரை நியமனம் செய்துள்ளது. இதில், சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேலாக வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடைநிலைப் பணிகளுக்கு 10- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தொழிற் சான்றிதழ் படிப்பு (ஐடிஐ) பயின்றிருக்க வேண்டும். குறைந்த கல்வித் தகுதி உடைய இவர்களால் சரளமாக ஆங்கிலமோ, தமிழ்மொழியோ பேசத் தெரிவதில்லை.
மேலும், ரயில்வே பாதுகாப்புதுறைகளில் பணியமர்த்தபடும் இப்பணியாளர்களால் நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் கூறுவதை மொழிப் பிரச்னை காரணமாக தவறு செய்ய வாய்ப்பு ஏற்படும்.
ரயில்வே பாதுகாப்புத் துறையில் கடைநிலை ஊழியர்கள் பிரிவில் அந்தந்த மாநிலத்தவர்கள் நியமனம் செய்வதே, ரயில்வேயின் பாதுகாப்புக்கு உகந்தது.
இதற்காக, ரயில்வே பணியிடங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம். பணிச்சிக்கலை தவிர்க்கும் நோக்கத்தில் தேர்வு செய்யும் இந்த நடைமுறை விதிகளை மாற்றம் செய்ய ரயில்வே துறை முன்வர வேண்டும் என்றார்.