லால்குடி வட்டம், வடுகர்பேட்டையிலுல்ள புனித ஆரோக்கியமாதா திருத்தலத் தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இத்திருத்தலத்தின் 346- ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உதகை மண்டல மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் கொடியேற்றி திருப்பலி நடத்தினார்.ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6- ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்புத் திருப்பலியும். சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத் திருப்பலி, இரவு 11 மணிக்கு சப்பர பவனியும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அன்னையின் பிறப்பு பெருவிழா, ஆடம்பரத் திருப்பலியும், காலை 8 மணிக்கு பெரிய திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும் நடைபெற்றது. வடுகர்பேட்டை, கல்லக்குடி, புள்ளம்பாடி, ஆலம்பாக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் தேர்பவனியில் பங்கேற்றனர். திங்கள்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலயப் பங்குதந்தை பி.தங்கசாமி, உதவிப் பங்குத்தந்தை ஜெ. சாந்தகுமார், திருச்சிலுவை கன்னியர்கள், பட்டயதாரர்கள் , பங்கு மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.