மத்திய, மாநில அரசுகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தொழிற்சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவு எஸ்டிடியூ சார்பில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மீரான்மைதீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வாகன காப்பீட்டு கட்டணம், பதிவு கட்டணம், வாகன போக்குவரத்து கட்டணத்தை திரும்ப பெற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொழிற்சங்க மாநிலத் தலைவர் பாரூக், எஸ்டிபிஐ கட்சி திருச்சி மாவட்ட செயலர் இமாம்ஹஸன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொழிற்சங்க மாநிலச் செயலர் முகமது ரபீக், மாவட்ட துணைத்தலைவர் சக்கரை மீரான், நிர்வாகிகள் தமிமுன் அன்சாரி, ஹாரூன்ஷரீப், ஷானவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.