துறையூர் அருகே பச்சமலையில் தனியாக நடந்து சென்ற ஆசிரியையிடம் தவறாக நடந்து கொண்ட 16 வயதுச் சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
பச்சமலை மருதை கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல தொடக்கப்பள்ளி ஆசிரியை பிரியா (26). இவர், கடந்த திங்கள்கிழமை (செப். 9) பணி முடித்து விட்டு மருதையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள செம்புளிச்சான்பட்டிக்கு நடந்து சென்றபோது 16 வயதுடைய சிறுவன் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அவனிடமிருந்து தப்பிஓடிய ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து மருதை கிராம மக்களிடம் அந்த ஆசிரியை நடந்த விசயத்தைச் சொல்லி சிறுவனின் அடையாளத்தை கூறியபோது, அந்தச் சிறுவன் மருதை கிராமத்தைச் சேர்ந்தவரின் இளையமகன் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஆசிரியையின் கணவர் மனைவியை துறையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார். ஆனால் போலீஸார் சமரசம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து, வியாழக்கிழமை மருதையைச் சேர்ந்த ராஜேந்திரன் துறையூர் காவல் நிலையத்தில் சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இதற்கிடையே மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ரெங்கராஜ் செவ்வாய்க்கிழமை (செப். 10) மருதை கிராம மக்களிடம் விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.