திருச்சி க்ரீன் ரோட்டரி சங்கம் சார்பில் தில்லைநகர் மக்கள் மன்றத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து திருச்சி க்ரீன் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.பார்த்தசாரதி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் காமராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் லேண்ட் மார்க் எக்ஸ்போ இணைந்து தில்லைநகர் மக்கள் மன்றத்தில் 10 நாள்கள் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார். மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்கிறார். துணை ஆணையர் அ.மயில்வாகனன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் பி.புளூகாண்டி, லேண்ட் மார்க் எக்ஸ்போ இயக்குநர் ரவிசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இக்கண்காட்சியில் இலக்கியம், ஆன்மிகம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் நடைபெறும் கண்காட்சிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சலுகை விலையில் புத்தகம் விற்பனை செய்யப்படும். கண்காட்சியை பார்வையிட அனைத்து தரப்பினரும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்றனர்.
திருச்சி நகைச்சுவை மன்ற செயலர் சிவகுருநாதன், திருக்குறள் பேரவை நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.