மணப்பாறை: மணப்பாறையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 267 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணப்பாறையில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், கஞ்சா விற்பனையும் அதிக அளவில் நடைபெறுவதாகவும் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீஸார் மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணப்பாறை நகர் பகுதியில் மூன்று இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது.
ரெத்தினம் மகன் ராஜா(36) என்பவரிடம் 88 மதுபாட்டில்கள், மலையாண்டி மகன் வெள்ளைச்சாமி(44) என்பவரிடம் 114 மதுபாட்டில்கள், சின்னையா மகன் விஜயகுமார்(39) என்பவரிடம் 52 மதுபாட்டில்கள் என சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 267 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.7720 ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன், மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா பறிமுதல்: காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனி சிறப்பு படையான, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சிறப்புக்குழுவினர், மணப்பாறை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், பூங்கா சாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகராஜ் மனைவி மகாலெட்சுமி(36) மற்றும் கருப்பையா மகன் நாகராஜ்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 1,600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10,880 ரொக்கப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முசிறியில்... முசிறி பகுதியில் மதுபானம் விற்ற இருவரை முசிறி போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறி காவல் ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் போலீஸார், சனிக்கிழமை இரவு முசிறியின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாச்சம்பட்டியில் பெ.செல்வராஜ் (50) என்பவர் வயல் பகுதியிலும், சொரியம்பட்டியில் பெரியசாமி (70) என்பவர் சொரியம்பட்டி மேட்டு பகுதியிலும் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன், 25 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.