திருச்சி மெயின்கார்டுகேட் அருகே கல்லூரிச் சாலையில், ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாநில அமைச்சர்கள் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
திருச்சி தூய வளனார் கல்லூரி சார்பில், கல்லூரிச் சாலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ. 7 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வந்தது.
இப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில் திருச்சி மாநகரக் காவல்துணை ஆணையர்கள் ஆ.மயில்வாகனன், என்.எஸ்.நிஷா, தூய வளனார் கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ, செயலர் எஸ்.பீட்டர், முதல்வர் எம். ஆரோக்கியசாமி சேவியர், பொருளாளர் கு.ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.46.50 லட்சம் மதிப்பில் 7 விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கிய அமைச்சர்கள், துவாக்குடி- பஞ்சப்பூர் இடையே நடைபெற்று வரும் சுற்று வட்டச் சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.