பன்னாங்கொம்பு பகுதியிலுள்ள செல்லிடப்பேசி விற்பனையகத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை அருகிலுள்ள பன்னாங்கொம்புவில், வீரா கோவில்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சுரேஷ் செல்லிடப்பேசி விற்பனையகம் நடத்தி வருகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு விற்பனை முடித்து விற்பனையகத்தை பூட்டிச் சென்ற இவர், சனிக்கிழமை காலை திறக்க வந்தார்.
அப்போது விற்பனையகத்தின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 3 மடிக்கணினிகள், 6 செல்லிடப்பேசிகள், 2 பென்டிரைவ் ஆகியவை திருட்டு போயிருப்பது சுரேசுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த புத்தாநத்தம் காவல் நிலையத்தினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.