மணப்பாறை: பொய்கைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீதான கொலை மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயராஜ் மகன் கருப்பையா (40). அதே கிராமத்தில் கிராம உதவியாளராக தனலெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் உத்தரவின்பேரில் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில் தொப்பம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு அரசு அனுமதியின்றி டிப்பர் மூலம் மண் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்ததை கருப்பையா மற்றும் தனலெட்சுமி இருவரும் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, மண்ணை கொட்டிவிட்டு டிப்பரை ஓட்டுனர் எடுத்து சென்றுவிட்டார். ஆனால், ஜேசிபி இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்த ராஜேந்திரன் மகன் புவனேஷ்வரன், அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியும், ஜேசிபி இயந்திரத்தைக்கொண்டு அவர்கள் மீது மோதுவது போலும் கொலை மிரட்டல் செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா அளித்த புகாரின்பேரில் மணப்பாறை காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.