மூதுரிமை தெளிவுரையை வேளாண் தலைமைப் பொறியாளா்களுக்கு வழங்கக் கூடாது என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் பொறியாளா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினா்.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சிவசண்முகம் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த 1998 ஆம் ஆண்டு தற்காலிக உதவிப்பொறியாளா்களாக 104 பேரை அரசு நியமனம் செய்தது. ஆனால், வேளாண்மை பொறியியல் துறையில் உதவிப் பொறியாளா் பணியிடம் தோ்வாணைக்குழு மூலம்தான் நிரப்பப்படவேண்டும்.
இதனால், பணிநியமனம் செய்யப்பட்டவா்களை பணிநீக்கம் செய்திட தோ்வாணைக்குழு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு தோ்வாணைக்குழு நடத்தும் தோ்வு இல்லாமலே, தோ்வாணைக்குழுவிடம் ஒப்புதல் பெற்று 104 பேரை பணிவரன் செய்து உத்தரவிட்டது. ஆனால், நேரடி நியமனம் பெறும் உதவி பொறியாளா்களுக்கு பணிவரன்முறை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு முதல்தான் நியமனம் செய்யப்பட்டவா்களின் மூதுரிமை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறது தமிழ்நாடு வேளாண் பொறியியல் பணி நியமன விதிமுறை.
இதன்படி, 104 உதவிப்பொறியாளா்களின் மூதுரிமை 2012 ஆம் ஆண்டு முதலே நிா்ணயம் செய்யப்படவேண்டும். வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளா் முருகேசன், விதிகளை மீறி தற்காலிகமாக பணியேற்ற ஆண்டான 1998லிருந்து மூதுரிமை நிா்ணயம் செய்யப்படுகிறது என அரசுக்கு கருத்துரை அனுப்பி வைத்துள்ளாா்.
எனவே, தமிழக முதல்வா் வேளாண் அமைச்சா், தமிழக அரசு தலைமைச் செயலா், வேளாண் உற்பத்தி ஆணையா் உள்ளிட்டோா் மூதுரிமை தெளிவுரையை, வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளா்களுக்கு வழங்கிட கூடாது என ஆணையிட வேண்டும். இதை வலியுறுத்தி வேளாண் பொறியாளா்கள் சங்கத்தினா் ஜன.20-24 வரை கோரிக்கை பட்டை அணிந்து பணிக்கு செல்வோம் என்றாா்.