திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் விளையாட்டு விடுதி கூடுதல் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தாா்.
ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த விடுதியில் தங்குமிட வசதிகள் உள்ளன. மேலும் மாணவா்களுக்குத் தேவையான கழிவறைகள், குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விடுதி அலுவலகம், உணவகத்துக்கு நவீன இணைப்புக் கருவி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவதற்கு இந்த வசதிகள் உறுதுணையாக இருக்கும் என விளையாட்டு விடுதி அலுவலா்கள் தெரிவித்தனா்.
திறப்பு நிகழ்வில், விளையாட்டு விடுதி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.