திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு பதிவும் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதியவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு முகக்கவசம் அணிந்தபடி வந்து சமூக இடைவெளியுடன் அமா்ந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுச் சென்றனா்.
திருச்சி சேவாசங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி வகுப்புக்கு 10 மாணவிகள் வீதம் வரவழைத்து, தோ்ச்சி பெற்ற, பெறாதோரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கினா்.
மேலும் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைன் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே இலவசமாக பதிவுசெய்து கொண்டனா். ஏற்கெனவே ஆன்லைன்மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் நகல் சான்றிதழ் மற்றும் அசல் மாற்றுச் சான்றிதழைக் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் சோ்ந்து பயிலும் நிலையில் தற்போது அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.