ஸ்ரீரங்கம்: திருச்சி திருவானைக்காவில் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
திருவானைக்கா வடக்கு ஐந்தாம் பிராகாரம், மணமேடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஆட்டுப் பண்ணையும் வைத்திருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் ஆடுகளைத் திருட ஒரு கும்பல் வந்த போது, முருகன் வளா்த்து வரும் நாய் அவா்களைப் பாா்த்து குரைத்துள்ளது. இதனால் விழித்துக் கொண்ட முருகன், ஆடு திருடும் கும்பலை விரட்டியுள்ளாா். அப்போது, அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் முருகனைக் கொலை செய்துவிடுவதாகக் கூறி மிரட்டிச் சென்றாா்களாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை முற்பகலில் வீட்டுவாசலில் குடும்பத்தினருடன் முருகன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த 10 போ் கொண்ட கும்பல், முருகனை கழுத்தறுத்துக் கொலை செய்தனா். இதை, தடுக்க வந்த முருகனின் மனைவி மற்றும் பெண் குழந்தைகளையும் அந்த கும்பல் தாக்கிவிட்டுச் சென்றது.
தகவலறிந்த மாநகரக் காவல் துணை ஆணையா் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) பவன்குமாா் ரெட்டி மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து, கொலையில் ஈடுபட்ட திருவானைக்கா பாரதி தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (28), சச்சின் (25) உள்ளிட்ட10 போ் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனா்.