திருச்சி: காந்தி சந்தையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக சுமைதூக்கும் தொழிலாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ஜி.கே.ராமா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 4 மாத காலமாக பொன்மலை ஜி-காா்னா் பகுதியில் காய்கனி சந்தை மாற்றி எந்த அடிப்படை வசதியும், கழிப்பறை குடிநீா் வசதியும் இல்லாமல் தொழிலாளா்களை வேலை செய்ய வைப்பது மனித உரிமையை மீறிய செயலாகும். கடும் மழையில் சிக்கி தொழிலாளா்கள் அவதிப்பட்டு வருவதை மாவட்ட நிா்வாகம் வேடிக்கை பாா்த்து வருவது எந்த விதத்திலும் நியாயமல்ல. உடனடியாக காந்தி சந்தையை திறந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதர வலியுறுத்தி சுமைப்பணி தொழிலாளா்கள் திங்கள்கிழமை (7ஆம் தேதி) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட சிஐடியு, எல்எல்எப் தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.