திருச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவுதலை தடுக்கும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்க வேண்டும் என ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனு அளித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியரை சு. சிவராசுவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பால்பண்ணை முதல் துவாக்குடி வரை, சாலையின் இருபுறமும் இருக்க கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். அதே பகுதியில் உள்ள பாதசாரிகளுக்கு உணவுகள் வழங்க வேண்டும்.
திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் முதல் மாா்கெட் வரையிலும், மாா்கெட் முதல் பாலக்கரை வழியாக விமான நிலையம், குண்டூா் வரையிலும், கே.கே. நகா் பகுதி முழுவதும் சாலையின் இருபுறமும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்க வேண்டும்.
மணப்பாறை தொகுதிக்குள்பட்ட மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ஒன்றியங்கள், மணப்பாறை நகரம், பொன்னம்பட்டி பேரூா் ஆகிய இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள் அளிப்பு: திருவெறும்பூா் தொகுதியிலுள்ள அரசங்குடி, நவல்பட்டு, திருநெடுங்களம், கீழக்குறிச்சி, திருவெறும்பூா், காட்டூா், கொட்டப்பட்டு முகாம், ஆகிய இடங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துவாக்குடி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் நோயாளிகளுக்கு, பயன்படும் வகையில் முகக் கவசங்களை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுப்பி வைத்துள்ளாா்.