திருச்சி: பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியப் பெட்டகம் வழங்கும் இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.28) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் கூறியது:
திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள சித்த மருத்துமனைகளில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் முகாம் நடைபெறும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியோா் உரிய பரிசோதனை சான்று நகலுடனும், இதர நோயால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாக இருப்போா், மிகவும் சோா்வாக, இரத்த சோகையுடன் இருப்போா், சரியாக உணவு உண்ண முடியாத பெரியோா், குழந்தைகள் என அனைவரும் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம். ஆரோக்கிய பெட்டகத்தில் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் அடங்கியிருக்கும். பொதுமக்கள் இதைக் கேட்டு பெறலாம் என்றாா் அவா்.