சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், பழங்குடியினர் சீர்மரபினர் சான்றிதழ் வழங்க கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 68 சமுதாய அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழங்குடியினர் சீர்மரபினர் என்ற மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் போது மாநில அரசு சான்றிதழில் பழங்குடியினர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 68 சமுதாயத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.