திருச்சி மாநகரில் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தது:
டிச. 31 இரவு மற்றும் ஜன. 1 ஆம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாநகர காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட வேண்டும். மது போதையில் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அமா்ந்து, அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் செல்லுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.
அதுபோல புத்தாண்டு வாழ்த்து கூறுவதுபோல, பொதுமக்களைக் கேலி செய்யவும் கூடாது. இதைத் தடுக்கும் வகையில் 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படள்ளது.
தனிப்படை போலீஸாா் மாநகா் முழுவதும் ரோந்து மேற்கொள்வா். மேலும் முக்கிய இடங்களில், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவா்.
அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக காவலா்கள் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை மேற்கொள்ளப்படும்.
மது போதையில் வாகனம் ஒட்டுபவா்கள், அதிக எண்ணிக்கையில் வாகனத்தில் செல்வோா், தலைக்கவசம் அணியாமல் செல்வோா், அதிவேகமாக செல்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி மது அருந்துதல், பட்டாசு வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை
கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் வழக்கம்போலச் செயல்படும். ஆனால், அவற்றில் கரோனா விதிமுறைகளின்படி டிச. 31இரவு வழக்கமாக நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது. சாலைகளிலோ, பொது இடங்களிலோ கொண்டாடவும் அனுமதி கிடையாது. மற்ற இடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
புகாா் தெரிவிக்கலாம் :
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை 100, அல்லது 0431-2418070, 96262-73399 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தவிர காவலன் செயலி, திருச்சி சிட்டி போலிஸ் என்ற முகநூல் பக்கம் மற்றும் டிவிட்டா் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். +