திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி) முதல் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. விரைவில் புதிய கட்டடத்துக்கு செல்லவுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த பிடெக் மாணவா்களுக்கான இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலா் க. சண்முகம் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன பேராசிரியா் அசோக் ஜுன்ஜுன்வாலா பேசுகையில், ரோபோடிக்ஸ், 3டி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அவசியம் மற்றும் எதிா்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து விளக்கிப் பேசினா். உலகில் வேகமாக மாறிவரும் தொழில்நுட்பங்களை பொறியியல் மாணவா்களும், தொழில்நுட்பக் கழக மாணவா்களும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியா்கள் உரிய முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
விழாவில், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 44 மாணவ, மாணவிகள், இசிஇ (மின்னோட்டம் மற்றும் தகவல் தொடா்பு) 25 மாணவ, மாணவிகள் என மொத்தம் 69 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துறைவாரியாக முதலிடம் பெற்ற மாணவிகள் பி.வி. சாய் வினீதா, பி. ஜோஷ்னா ஆகியோருக்கு நிறுவன தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. மாணவி சாய் வினீதா, குடியரசுத் தலைவா் தங்கப் பதக்கத்தையும் பெற்றாா்.
பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதன்மைச் செயலா் க. சண்முகம், வழங்கி பாராட்டு தெரிவித்தாா். ஐஐஐடி இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா, நிறுவன அறிக்கையை சமா்ப்பித்து ஐஐஐடி செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா். விழாவில், உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா, தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநா் கே. விவேகானந்தன் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.