இலவச வீட்டுமனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனா். அம்மனுவில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த தாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தவே சிரமப்படுவதால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி 7 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் ஏழை, எளியோருக்கு இலவச வீடு, வீட்டுமனை வழங்க அறிவுறுத்தியிருப்பதால் சேதுராப்பட்டி, நவல்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.