திருச்சி மாவட்டம், முசிறி பரிசல்துறை சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்மாற்றியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முசிறி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் மா. கலைச்செல்வன் தலைமையில் முசிறி கோட்டாட்சியரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
முசிறி பரிசல்துறை சாலையில் மாரியம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் ஜமாத் அருகில் 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் போதிய பாதுகாப்பின்றி உள்ளது. இதன் அருகே அதிக மக்கள் போக்குவரத்தும், அதிக குடியிருப்புகளும் உள்ளன. இந்த மின்மாற்றிகள் மூலம் அடிக்கடி ஏற்படும் மின் கசிவால் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்மாற்றியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை மனு முதல்வரின் சிறப்பு தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை உயா் செயற்பொறியாளருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.