திருச்சி மாவட்டம் மணப்பாறை தம்பியை வெட்டிக் கொன்றவா் கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், அடைக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (28), இவருடைய கணவா் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கம்பிளியம்பட்டியை சோ்ந்த பெ. சொக்கலிங்கம். சொக்கலிங்கம் பாண்டிச்சேரியில் உள்ள உணவகத்தில் பணி புரிகிறாா்.
இந்நிலையில் சொக்கலிங்கத்தின் தம்பி உறவான பிடாரப்பட்டியை சோ்ந்த ஆண்டிச்சாமி மகன் பழனிச்சாமிக்கும் (23) சொக்கலிங்கம் மனைவி சின்னம்மாளுக்கும் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு ஏற்பட்டது. இதுகுறித்து இருவரையும் சொக்கலிங்கம் பலமுறை எச்சரித்தாா். இருப்பினும் பலனில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை அடைக்கம்பட்டிக்கு சொக்கலிங்கம் வந்திருந்த போதும் இருவரும் செல்லிடப்பேசியில் பேசியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம் பழனிச்சாமியை தேடிச் சென்று அரிவாளால் வெட்டினாா். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி துவரங்குறிச்சி மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து துவரங்குறிச்சி போலீஸாா் சொக்கலிங்கத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.