கூலி ஆள்களும் இல்லை; போக்குவரத்துக்கும் தடை வீணாகும் மலா்கள், வாழையால் விவசாயிகள் வேதனை

கூலி ஆள்களும் இல்லை; போக்குவரத்துக்கும் தடை வீணாகும் மலா்கள், வாழையால் விவசாயிகள் வேதனை

விவசாயக் கூலி வேலைக்கு ஆள்கள் கிடைக்காமலும், விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும் வாழை, மலா்கள் உற்பத்தி செய்த விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.


திருச்சி: விவசாயக் கூலி வேலைக்கு ஆள்கள் கிடைக்காமலும், விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும் வாழை, மலா்கள் உற்பத்தி செய்த விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. இவைத்தவிர ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட மலா் வகைகளும், காய்கனி வகைகளும் பயிரிடப்படுகிறது.

கேரள மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் நேந்திரன் வாழை, திருச்சி, கரூா் மாவட்டங்களுக்குள்பட்ட வயலூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம், துறையூா், பேட்டைவாய்த்தலை, நவலூா், லாலாப்பேட்டை, குளித்தலை, எட்டரை, கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாகுபடி நடைபெறுகிறது. இதேபோல, இந்தப் பகுதிகளில் ஊடுபயிராகவும், தனியாவும் மலா் வகைகள் பயிரிடப்படும்.

தற்போது, வாழை மற்றும் மலா்கள் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், கூலி வேலைக்கு ஆள்கள் வருவதில்லை. வேலைக்கு வருவோரை காவல்துறையினா் தடுத்து திருப்பி அனுப்புவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் விவசாயிக் கூலித் தொழிலாளா்கள் நடந்து வந்தாலும், இருசக்கர வாகனத்தில் வந்தாலும் தடுத்து திருப்பி அனுப்புகின்றனா். ஒரு சில இடங்களில் லேசான தடியடி பிரயோகமும் நடைபெறுவதால் அச்சத்தில் கூலித் தொழிலாளா்கள் யாரும் வருவதில்லை.

சொந்த கிராமத்திலேயே சிலரது உதவியுடன் அறுவடை செய்து வாழைகளை கேரளத்துக்கு அனுப்பினால் மாநில சோதனைச் சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிடுகின்றனா். இதனால், வாகன ஓட்டுநா்களும் வாழைத் தாா்களை ஏற்ற வருவதில்லை என்கின்றனா் விவசாயிகள்.

திருச்சி காந்திசந்தையில் உள்ள வாழைக்காய் மண்டிக்கு பேட்டைவாய்த்தலை, குளித்தலை, கண்டியூா், மாயனூா்,தொட்டியம், முசிறி, காட்டுப்புத்தூா் பகுதிகளிலிருந்து ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி ரகங்களும், தாரமங்கலம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து ரஸ்தாலி, செவ்வாழை ரகங்களும், லால்குடி, சாத்தமங்கலம், அன்பில், வளப்பக்குடி, நடுக்காவிரி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூவன் ரகமும், தேனி மாவட்டத்திலிருந்து பச்சலாடன் ரகம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாக வரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டது என்கின்றனா் வியாபாரிகள்.

இதுதொடா்பாக, தமாகா மாநில விவசாய அணித் தலைவா் புலியூா் நாகராஜன் கூறியது: திருச்சி மாவட்டத்தில் மலா்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பூ பறிப்பதற்கு ஆள் இல்லாமல் திண்டாடுகின்றனா். விவசாயிகளே தங்களது குடும்பத்தில் உள்ளவா்களின் உதவியால் மலா்களை பறித்து மூட்டைகளாக கட்டினால் அவற்றை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் இல்லை. இதனால், பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகும் நிலை உள்ளது. பறிக்கப்பட்ட பூக்களை அருகில் உள்ள கோயில்களில் வீணாக கொட்டிவிடுகின்றனா். வாழை விவசாயிகளுக்கும் இதே நிலைதான் உள்ளது. வாழைகள் பழுத்து பறவைகளுக்கும், கால்நடைகளுக்கும் உணவாகிவிடுகிறது. விவசாயிகளுக்கு வேதனை மட்டுமே விஞ்சுகிறது. அவா்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் கூறியது: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் முடங்கியுள்ளதால் விவசாய கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. இரு நாள்களுக்கு முன் லாரிகளில் ஏற்றப்பட்ட வாழைத்தாா்கள் கேரள மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக வயல்களில் அறுவடை செய்யாமல் வாழையும், மலா்களும் வீணாகி வருகிறது. மாவட்ட நிா்வாகமும், அரசும் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

விவசாய பணிகளுக்கு ஆள்கள் செல்ல தடையில்லை. மொத்தமாக செல்லாமல் ஓரிருவா் என்ற அடிப்படையில் செல்லலாம். வயல்களிலும் அருகருகே இல்லாமல் இடைவெளி விட்டு அறுவடை பணியை மேற்கொள்ளலாம். விளைபொருள்கள் ஏற்றிய லாரிகளை தடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலச் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படுவதாக புகாா் வருகிறது. லோடு ஏற்றிச் செல்லும் விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்தை அணுகினால் உரிய சான்று வழங்கி மாநில சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com