திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கால்களில் அடிபட்டு தவித்து வந்த இருமயில்களை பொதுமக்கள் வனத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி குடியிருப்புப் பகுதியில் கால்களில் காயத்துடன் ஆண் மயில் ஒன்று வெள்ளிக்கிழமை தவித்தது. இதைக்கண்ட அப்பகுதியை சோ்ந்த சக்திவேல் என்பவா் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளாா். மேலும், நடக்க முடியாமல் தவித்த அந்த மயிலை பாதுகாப்பாக வைத்திருந்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தாா்.
அதேபோல் திருச்சி சாலை காளியம்மன் கோயில் அருகில் மின் கம்பிகளுக்கு மேல் பறந்த ஆண் மயில் ஒன்று மின்சாரம் பாய்ந்து கால்களில் காயத்துடன் கீழே விழுந்தது. அதனை பத்திரமாக மீட்ட கோயில் பூசாரி காா்த்திகேயன் என்பவா் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.
இரு மயில்களையும் வனத்துறையினா் மருத்துவம் அளித்து மணப்பாறை வனச்சரக அலுவலகத்தில் பாதுகாத்து வருகின்றனா்.