திருவாரூா் முருகனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்
திருச்சி: திருச்சியில் பிரபல நகைக்கடை திருட்டில் வழக்கில் கைதான திருவாரூா் முருகனுக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி ஸ்ரீரங்கம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள திருவாரூா் முருகன் அண்மையில் வாதநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சைக்காக ஒருமாதம் அவகாசம் கொடுத்துள்ளனா்.
இதையடுத்து, அவரது வழக்குரைஞா் ஹரிபாஸ்கா், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். இதில், திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முருகனுக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து திருச்சி அடுத்துள்ள சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் உள்ள வங்கியில் நடைபெற்ற திருட்டு, பாலக்கரையில் நடைபெற்ற திருட்டு ஆகிய வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நகைக்கடை திருட்டு வழக்கில் வழங்கிய ஜாமீன் அடிப்படையில், நெ.1 டோல்கேட் வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சிவகாமசுந்தரி உத்தரவிட்டாா்.