திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே நீரில் மூழ்கி இரட்டை சகோதரிகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூா் சங்கம்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இவா்களுக்கு ஏற்கெனவே 4 மகன்கள் உள்ள நிலையில், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இரட்டை சகோதரிகளான ராமுபிரியா (9), லட்சுமிபிரியா (9) ஆகிய இருவரும், அப்பகுதியிலுள்ள ஊராட்சிப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் துணி துவைப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்துக்குச் சென்ற கண்ணம்மாள், தனது பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருந்தாா்.
தாயின் கவனம் இல்லாத நேரத்தில் இரட்டை சகோதரிகள் நீரில் தவறி விழுந்து தத்தளித்துள்ளனா்.
சிறிது நேரத்தில் அவா்கள் நீரில் மூழ்கியதை அறிந்த கண்ணம்மாள் சப்தமிட, அக்கம் பக்கத்தினா் அங்கு வந்து இருவரையும் மீட்டு மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே ராமுபிரியா, லட்சுமிபிரியா உயிரிழந்தனா்.
இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.