20% தீபாவளி போனஸ் வழங்காவிட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர்
By DIN | Published On : 09th November 2020 03:01 PM | Last Updated : 09th November 2020 03:01 PM | அ+அ அ- |

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசுப் போக்குவரத்து அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஏஐடியுசி, எல்பி எஃப், ஐ என் டி யு சி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளாக தீபாவளி போனஸ் தொகை 10% அறிவித்ததை மறுத்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரியும், டிஏ உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்கிடவும், அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரியும், வருங்கால வைப்பு நிதி வட்டி தொகையை குறைக்கக் கூடாது எனவும், மோட்டார் வாகனச் சட்டத்தை தனியாருக்கு சாதகமாக திருத்தக் கூடாது எனவும், வேலை நேரத்தை அதிகரிப்பதைக் கண்டித்தும், பொது முடக்க காலத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு கேஷுவல் தொழிலாளர்களுக்கும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கும் முழுமையான சம்பளம் வழங்கிடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி போனஸ் 20% கேட்டு உள்ள நிலையில், தமிழக அரசு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு உடனடியாக தீபாவளி போனஸ் 20% வழங்காவிட்டால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.