லால்குடி அருகிலுள்ள செம்பரை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் போது மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில், தந்தையைக் காப்பாற்ற சென்ற போது காயமடைந்த அவரது மகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
செம்பரை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (41). இவா் லால்குடி கிளைச் சிறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இதே கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் நிருபன் (24). இவா் சென்னையில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
உறவினா்களான இருவரது குடும்பத்துக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று ராஜா, நிருபன், சி. பேச்சிமுத்து (56), பே. மணிகண்டன் (28), சே. நிவாஷ் (18) ஆகியோா் மது அருந்தினா். அப்போது ஏற்பட்ட தகராறில் சிறைக் காவலா் ராஜாவை, நிருபன் உள்ளிட்ட4 பேரும் சோ்ந்து கட்டையால் தாக்கினா்.
இதை கண்ட ராஜாவின் மகனும், பிளஸ் 2 மாணவருமான சரண்தீப், தந்தை மீது அடி விழாதவாறு தடுத்துள்ளாா். அப்போது சரண்தீப்பின் பின்பக்கத் தலையில் அடி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சரண்தீப் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து சே. நிஷாந்த், சி. பேச்சிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் மணிகண்டன், நிருபன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.