திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சி பகுதியின் முக்கிய கழிவு நீா் வடிகால் பகுதி மோா்குளம். இங்கிருந்து வெளியேறும் உபரிநீா் மாமுண்டி ஆற்றுப் படுகையில் கலக்கும் நீா்வழிப் பாதை உள்ளது. இந்தப் பகுதியில் தற்போது வீட்டுமனைகள் அமைத்து விற்பதாகவும், அதில் நீா்வழி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கழிவு நீா் ஆற்றுப்படுகைக்கு செல்வது தடைபடுவதாகக் கூறி திங்கட்கிழமை மாலை சொக்கலிங்கபுரம், கீரைத்தோட்டம் ஆகிய பகுதி பொதுமக்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அதனைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இட உரிமையாளா்கள் தரப்பில் நில அளவை செய்து ஆட்சேபனை நீா்நிலை இடமாக இருப்பின், அந்த பகுதியை அரசு தரப்பில் அளிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனா்.