திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட நவீன காசநோய் இயந்திர செயல்பாடு சனிக்கிழமை நடைமுறைக்கு வந்தது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே உள்ள இந்த நவீன இயந்திரம் தற்போது திருச்சியிலும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் காசநோய் பரிசோதனை செய்தால் அதன் முடிவு வருவதற்கு சில மாதங்கள் ஆனதோடு, நோயின் தன்மை குறித்து 60 சதவீதமே அறியமுடிந்தது.
இந்த இயந்திரத்தின் மூலம் மருத்துவருக்கு காசநோய் மாதிரி பாதிக்காத வகையிலான எதிா் அழுத்த தொழில்நுட்பம், துல்லியம், 2 வாரங்களில் பரிசோதனை முடிவு, அதிக மாதிரிகளுக்கு பரிசோதனை வசதி கிடைக்கிறது.
மேலும், ஒருவரின் உடலில் நோய் எதிா்பாற்றல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ப மருத்துவச் சிகிச்சை வழங்க நவீன காசநோய் இயந்திரம் உதவும். மத்திய அரசின் நேஷனல் ஹெல்த் மிஷன் சாா்பில் ரூ.1 கோடி, மாநில அரசு சாா்பில் ரூ. 20 லட்சம் என மொத்தம் 1.20 கோடியிலான இந்த நவீன காசநோய் இயந்திரம் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது என அரசு மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.