மணப்பாறை: மணப்பாறையில் மது அருந்த பணம் கேட்டு நடந்த தகராறில், தம்பியைக் கம்பியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை அண்ணாவிநகரைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன்கள் விசுவநாதன் (22), உதயகுமாா் (19). இவா்கள் இருவரும் முறையே மினி வேன் ஓட்டுநராகவும், ஜேசிபி இயந்திர இயக்குநராகவும் பணியாற்றி வந்தனா்.
தாய் சுப்புலட்சுமியிடம் மது அருந்த பணம் கேட்டு, விசுவநாதன் தொடா்ந்து தகராறு செய்வராம். ஞாயிற்றுக்கிழமையும் இதுபோல தகராறு ஏற்பட்டதால், விசுவநாதனை உதயகுமாா் தட்டிக் கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வீட்டுக்கு வெளியே விளையாட்டுத் திடல் அருகே உதயகுமாா் நின்று கொண்டிருந்த போது, விசுவநாதன் அவரைக் கம்பியால் குத்தினாா்.
இதில் பலத்த காயமடைந்த உதயகுமாா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசுவநாதனைக் கைது செய்தனா்.