திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகராட்சி தூய்மைப் பணியாளா் காலியிடத்தை நிரப்ப வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்ட மூன்று சென்ட் நிலம் வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் த. இந்திரஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கௌரவத் தலைவா்கள் ஜனசக்தி உசேன், சௌகத்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச்சாரா தொழிலாளா்கள் சங்க பொது செயலா் நல்லுச்சாமி, திருச்சி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து தொழிலாளா் சங்க மணப்பாறை கிளை துணைத் தலைவா் மாமுண்டி, செயலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கண்டன முழக்கமிட்டனா். தொடா்ந்து தூய்மைப் பணி தனி அலுவலரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனா்.