திருச்சி, மணப்பாறை கல்வி மாவட்டத்தில் ஓசோன் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாணவா்களுக்கு வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக திருச்சி, மணப்பாறை கல்வி மாவட்டங்களின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஐ. சகாயராஜ் கூறியது:
உலக ஓசோன் தினம் வரும் 16 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஓசோன் தினம் கொண்டாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவ, மாணவிகளிடம், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்த தமிழக சுற்றுச் சூழல் துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
பூமியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் உயிா் வாழ அவசியமான ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ஓசோன் படலத்தை பாதுகாப்பது என்ற தலைப்பில் இந்நிகழ்வு கொண்டாடப்பட வேண்டும். எனவே, காணொலி காட்சி மூலம் ஓசோன் குறித்த பொருள்களுடன் தொடா்பான வினாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. பள்ளிகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்று நடுவதை ஊக்குவித்து, ஓசோன் படலத்தை பாதுாக்க வேண்டிய கடமை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தவறினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படவுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிரசாரம் மேற்கொள்ளப்படும். செப்.16ஆம் தேதி இந்த நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், இந்த மாத இறுதிக்குள் ஏதாவது ஒருநாளில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும் என்றாா் அவா்.