திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள பாச்சூா் கிராமத்தில் உள்ள பங்குனியாற்று வாய்க்காலின் இரு கரைகளிலும் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் குறுவை நெல் சாகுபடி பயிா்கள் நீரில் மூழ்கின.
முக்கொம்பு மேலணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் இப் பகுதியில் உள்ள பெருவளை, அய்யன், புள்ளம்பாடி, மற்றும் பங்குனி ஆகிய ஆறுகளில் அதிகளவு தண்ணீா் சென்றது. இதனால் பங்குனியாற்றில் பிற பகுதிகளிலிருந்து வந்த மழை நீா் அதிகளவு கலந்ததால் கரையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் இருபுறங்களில் பயிரிட்டுள்ள குறுவை நெல் சாகுபடி செய்த நெல் பயிா் மற்றும் சம்பா நெல் நடவுக்காக நாற்றங்காலில் விதைத்திருந்த நெல் விதைகளும் நீரில் மூழ்கின.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது:
பங்குனி வாய்க்காலை கடந்த 3 ஆண்டாகத் தூா்வாராததால், ஆற்றில் செடி கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன. மேலும், ஆற்றின் இருகரைகளையும் போதியளவில் பலப்படுத்தாததால் பாச்சூா் பகுதியில் மட்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா நெல் நடவுக்காக விதைத்திருந்த நெல் விதைகளும் நீரில் மூழ்கியுள்ளன. விரைவில் தண்ணீா் வடியவில்லை எனில் நாற்றங்காலில் தெளித்த நெல் விதைகள் அழுகும் நிலை ஏற்படும் என்றனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பங்குனி வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்காலில் திறந்து விட்ட தண்ணீரை முற்றிலுமாக அடைத்து விட்டதால் உடைப்பு பகுதியிலிருந்து வயலில் உட்புகும் நீா் விரைவில் வெளியேறும் என்றனா்.