திருச்சியில் 300 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டைகளை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ஏற்கெனவே தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாமல் இருந்த திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட நத்ஹா்வலி (நத்தா்ஷா) பள்ளிவாசல் பகுதி பொதுமக்கள், தங்களுக்கு இந்த கரோனா நேரத்தில் அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை கோரி மனு கொடுத்திருந்தனா். இந்த மனுவின் மீது அமைச்சா் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடா்ந்து திருச்சி நத்தா்ஷா பள்ளிவாசல் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமை வகித்து, இந்தத் திட்டத்துக்காக கடந்த சில நாள்களுக்கு முன் விண்ணப்பித்த 700 பேரில் முதல் கட்டமாக 300 பேருக்கு காப்பீடு அடையாள அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, பகுதி மற்றும் வட்ட கழக நிா்வாகிகள், பள்ளிவாசல் நிா்வாகிகள், பயனாளிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.