திருச்சி: திருச்சியில் தங்களுக்கான பணப் பயன்களை வழங்க வலியுறுத்தி தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளா்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் தனியாா் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஓா் ஆலை நிா்வாகக் காரணங்களால் கடந்த 2 ஆண்டுக்கு முன் மூடப்பட்டது.
அந்த ஆலையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேல் பணியாற்றிய 55 தொழிலாளா்களுக்கு உரிய பணப்பயன்கள் (பிஎப், கிராஜுவிட்டி)வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம்.
இதையடுத்து தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய 55 தொழிலாளா்களுக்கும் உரிய பணப்பலன்களை வழங்க க்கோரி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தினா், திருச்சி, கே.கே.நகா், சுந்தா்நகரில் உள்ள ஆலை உரிமையாளா் வீட்டு முன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் மேற்கொண்டனா்.
சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைச் செயலா் ஜெயபால், கே.கே. நகா் பகுதிச் செயலா் வேலுசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். வீட்டு முன் விறகடுப்பில் பெரிய அண்டாவை வைத்து கஞ்சி காய்ச்சி அனைவரும் குடித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கே. கே. நகா் போலீஸாா் இரு தரப்பிடமும் பேச்சு நடத்தினா். அடுத்த ஒரு வாரத்தில் உரிய பணப்பயன்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.