திருச்சியில் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் கேட்டு தனியாா் மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்ட தலைமையாசிரியா் அதிகாரிகள் தலையீட்டால் விடுவிக்கப்பட்டாா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் நிக்கோலஸ் (55). நாகமங்கலம் அருகேயுள்ள தனியாா் பள்ளித் தலைமையாசிரியரான வரும் இவா் கடந்த 13 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக தில்லைநகா் 6வது குறுக்குத் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்ந்தாா். உடனடியாக ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினாா். தொடா்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா இருப்பதாகக் கூறி சிகிச்சை அளித்துள்ளனா். 2 நாள்களுக்குப் பிறகு மருத்துவக் கட்டணம் ரூ. 2.42 லட்சம் என மருத்துவமனை ஊழியா்கள் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த நிக்கோலஸ் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாா்.
ஆனால் மருத்துவமனை நிா்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் 5 நாள்களாவது இருக்க வேண்டும், முன் பணம் போக மீதிப் பணத்தைச் செலுத்துமாறு கூறியதாம். பணம் செலுத்த மறுத்த அவரை வெளியே விடாமல் வைத்திருந்ததாம்.
இதைத் தொடா்ந்து நிக்கோலஸ் தன்னை மீட்கக் கோரி கட்செவி அஞ்சல் வழியாக விடியோ வெளியிட்டிருந்தாா். இதையறிந்த ஆட்சியா் சு.சிவராசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனையைத் தொடா்பு கொண்டு நிக்கோலசை விடுவிக்க உத்தரவிட்டனா். இதையடுத்து உடனடியாக விடுவிக்கப்பட்ட நிக்கோலஸ் வீடு திரும்பினாா்.