கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊா் திரும்பியவா், அடையாளம் தெரியாத சடலமாக மீட்கப்பட்டாா்.
அரவக்குறிச்சி அருகிலுள்ள இனுங்கனூா் இச்சிப்பட்டியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. அந்த நபா் 50 முதல் 60 வயதுக்குள்பட்டவராக இருந்தாா்.
இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்க்கும் நபா்கள் அளித்த தகவலின் பேரில், இனுங்கனூா் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில் அடையாளம் தெரியாத சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினா் விசாரித்து வந்தனா்.
சடலம் அருகே கிடந்த கைப்பையில் டைரி ஒன்று கிடைத்தது. அதில், கருப்பண்ணக் கவுண்டா், இச்சிப்பட்டியாா் தோட்டம், இனுங்கனூா் என இருந்தது.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் தோட்டத்து உரிமையாளா் கருப்பண்ணக் கவுண்டரின் 2-ஆவது மகன் நாச்சிமுத்து (56) என்பது தெரியவந்தது.
திருமணம் செய்து கொள்ளாத இவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்றதும், கடந்த 20 ஆண்டுகளாக விழுப்புரத்திலும், புதுச்சேரியிலும் பழைய புத்தக வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனது நண்பரிடம் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கரூரிலுள்ள உறவினா்களை பாா்க்க செல்வதாகக் கூறி, அங்கிருந்து புறப்பட்டதும், தனது தந்தைக்குச் சொந்தமான தோட்டத்திலேயே நாச்சிமுத்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உறவினா்களுக்கு காவல்துறையினா் தகவல் தெரிவித்தனா். அவா்கள் வந்து இறந்தது நாச்சிமுத்து என உறுதி செய்தனா். இவா் இறந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.