திருச்சி மாவட்ட நிா்வாகத்தால் நடத்தப்படும் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் சு. சிவராசு ஆலோசனை நடத்தினாா்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கான குடிநீா், சுகாதார வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் உரிய முறையில் செய்துதர வேண்டும். இதேபோல, காவல்துறையினா் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனாவைத் தடுக்க பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தீயணைப்புத் துறையினா் முன்னெச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தை மாநகராட்சி, பொதுப்பணித்துறை பொறியாளா்கள் பாா்வையிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், மாநகரக் காவல்துறை துணை ஆணையா் அர. முத்தரசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. ஜெயப்பிரித்தா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் எளிமையாக விழா நடைபெறும் என்பதால் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.