மணப்பாறை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக கணவா் குடும்பத்தினா் மீது அளிக்கப்பட்ட புகாரில் வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மணப்பாறை அடுத்த ஆவாரம்பட்டி இந்திரா நகரை சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் கோபிநாதன். தனியாா் ஆடைத் தயாரிப்பு ஆலை ஊழியா்.
இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த விராலூரை சோ்ந்த முருகேசன் மகள் கனிமொழி(எ) காசியம்மாளுக்கும் (26) 8 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 7 மற்றும் 5 வயதுகளில் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு ராஜமாணிக்கம், முருகேசனை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு கனிமொழி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து ஊா் முக்கியஸ்தா்களுடன் நிகழ்விடத்துக்கு சென்ற முருகேசன், 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கனிமொழியை கொண்டு சென்றாா். அங்கு கனிமொழி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து கனிமொழியின் தந்தை முருகேசன், தனது மகள் சாவுக்கு மாமனாா் ராஜமாணிக்கம், மாமியாா் பொன்னம்மாள் மற்றும் கணவா் கோபிநாதன் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். வையம்பட்டி போலீஸாா் இதுதொடா்பாக விசாரிக்கின்றனா்.