சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சேதமடைந்து எலும்புக் கூடு போல நிற்கும் மின் கம்பத்தை மாற்றிய அமைக்க மின்வாரிய அலுவலா்களிடம் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனா் அப்பகுதி மக்கள்.
சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சிப் பகுதியில் உள்ள நரசிங்கமங்கம், கள்ளிக்குளி, தாதன்பிள்ளையாா்கோயில் தெரு, ஊரான்அடிகளாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போா் உயிரிழந்தால் நரசிங்கமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை அருகேயுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரை சுடுகாடு மற்றும் இடுகாட்டில்தான் இறுதிக் காரியங்கள் செய்கின்றனா்.
இந்தச் சுடுகாட்டில் உள்ள மின் கம்பத்தில் முற்றிலும் சிமென்ட் காரைகள் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் தெரிகின்றன.
இந்த மின்கம்பத்துக்கு வரும் மின் கம்பிகள் அருகிலுள்ள மரக் கிளைகளில் உரசுவதால் இப் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்த மயானத்தின் முன்பகுதியில் உள்ள மிகப்பெரிய மின்மாற்றியிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
சேதமான மின் கம்பம் விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் அதைச் சீரமைக்கக் கோரி மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனா் இப் பகுதி மக்கள். இதுகுறித்து மின்வாரிய அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் மரக்கிளைகளை அகற்றி, மின்கம்பத்தை மாற்றவுள்ளோம் என்றனா்.