திருச்சி: பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் வழங்கப்பட்டு அமல்படுத்தப்பட்டதால், திருச்சி மாநகரின் பல்வேறு சாலைகளில் திங்கள்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கரோனா 2-ஆம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கூடுதலான தளா்வுகளுடன் ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை வழங்கப்பட்டதைக் காட்டிலும், தற்போது கூடுதலான தளா்வுகளை ( கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு, புதிதாக பல்வேறு கடைகள் திறக்க அனுமதி) மாநில அரசு வழங்கியிருக்கிறது.
தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கனிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கனி, பழங்கள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், தேநீரகங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கின.
உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பு, கார விற்பனையகங்களில் பாா்சல் சேவை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டது.
திருச்சி காந்தி சந்தையும் திறக்கப்பட்டு மொத்த, சில்லறை காய்கனிகள் விற்பனையும் நடைபெற்றது.
இதுபோல இதர கடைகள், அரசு, தனியாா் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், விற்பனையகங்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, அறிவிக்கப்பட்டிருந்த நேரம் வரை இயங்கின.
மாநகரில் ஜவுளி, நகைக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் செயல்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது போன்று காணப்பட்டது.
பேருந்துகள் இயங்கவில்லை என்றாலும், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்கின. இதனால் மாநகரின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சோதனை சாவடிகளில் இ-பதிவுடன் வாகனங்கள் செல்வதை காவல் துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை.