திருச்சி மாநகரில் நிகழ்ந்த இருவேறு கொலை வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினருக்கு காவல் ஆணையா் எ. அருண் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
திருச்சி பாலக்கரை கீழப்புதூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் கோபிகண்ணன் மே 9 ஆம் தேதி இரவு 7 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து உதவி ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளா் அந்தோணி செல்வம், தலைமை காவலா்கள் சரவணன், ஜானி, இனுஸ்டின், கெல்லா் ஜேக்கப், தனசேகரன் மற்றும் சவுக்கத் அலி ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனா்.
இதேபோல் கரூா் புறவழிச்சாலையில் உள்ள நகைக்கடை ஊழியா் மாா்டின் ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறையூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் உமா சங்கரி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாதவன், செபஸ்டின், தலைமைக் காவலா் விஜயராஜ் ஆகியோா்கள் அடங்கிய தனிப்படை போலீஸாா் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனா். இந்த இரு வழக்குகளிலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையா் எ.அருண் நேரில் அழைத்து பாராட்டினா். மேலும் பாராட்டுச் சான்று மற்றும் வெகுமதி வழங்கினாா்.