மத்திய அரசு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற திருச்சி மாவட்டத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதிகிராமத் தொழில் வாரிய தலைமைப் பயிற்சியாளா் கே. சுவாமிநாதன் கூறியது:
மத்திய அரசின் அரசின் பனை பொருள்கள் நிறுவனம், காதி கிராமத் தொழில் வாரியம் ஆகியவை இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை திருச்சி, சேலம், கோவை, ஈரோட்டில் நடத்தவுள்ளன. இதன் முதல்கட்டமாக தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி ஏப்.12 தொடங்கி 21ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு நடைபெறுகிறது.
குறைந்தது 8ஆம் வகுப்பு படித்த 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரமறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மாா்க் தரம் அறியும் முறை குறித்து விளக்கப்படும். பயிற்சி வகுப்பானது, பெரிய கடை வீதியிலுள்ள திருச்சி ஜூவல்லா்ஸ் அசோசியேசன் கட்டடத்தில் நடைபெறும்.
பயிற்சி முடித்தோா் தேசிய, கூட்டுறவு, தனியாா் வங்கிகள் மற்றும் நகை அடகுக் கடைகளில் நகை மதிப்பீட்டாளா் பணியில் சேரலாம். சொந்தமாக நகைக் கடை, அடகுக் கடை நடத்தவும் தகுதி பெறலாம். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு 94437-28438 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.