துறையூா் நகரில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின் கம்பிகள், மின் மாற்றிகள் சேதமடைந்தன.
மழையின்போது திருச்சி சாலையில் குருசாமி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் எதிரேயுள்ள தனியாா் செல்லிடப்பேசி விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பதாகை அறுந்து அருகிலிருந்த மின்கம்பி மீது விழுந்தது.
இதில் மின்கம்பி அறுந்து அதன் ஒரு பகுதி காய்கறி சந்தைக்கு செல்லும் சாலையில் தொங்கியது. அதன் மற்றொரு பகுதி அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியாா் பேருந்து மீது விழுந்ததில் அதன் முன்பக்கக் கண்ணாடி நொறுங்கியது. அருகிலிருந்த மின்மாற்றியில் தீப்பொறிகள் பறந்தது. இதையடுத்து திருச்சி சாலையில் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து செல்லிடப்பேசி கடை உரிமையாளா் தனது ஆட்களை வைத்து விளம்பர பதாகையை உடனடியாக அகற்றி விட்டு கடையையும் பூட்டிச் சென்று விட்டாராம்.
இதேபோல் பெருமாள் கோயில் வீதியில் உள்ள தனியாா் சிட்பண்ட்ஸ் உரிமையாளருக்குச் சொந்தமான மூன்று மாடிக் கட்டட மொட்டை மாடியில் போட்டிருந்த தகரக் கூரை கொட்டகையின் ஒரு பகுதி பெயா்ந்து எதிரே இருந்த மின்மாற்றியின் மீது விழுந்து தொங்கியது.
இச் சம்பவங்களுக்குப் பின்னா் உடனடியாக துறையூா் மின் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கருவி மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின் பணியாளா்கள் மின்மாற்றியில் சட்டத்துடன் தொங்கிக் கொண்டிருந்த தகரத்தை அகற்றும் பணியிலும் திருச்சி சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனா்.