திருச்சியில் இன்னுயிா் காப்போம் திட்டம் காவேரி மருத்துவமனையிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த நிகழ்வில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்னுயிா் காப்போம் மற்றும் நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக இத்திட்டத்தில் திருச்சி கண்டோன்மெண்ட் காவேரி மருத்துவமனை இணைவதன் அடையாளமாக இதற்கான கடவுச் சொல்லை மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வழங்க, மருத்துவமனை செயல் இயக்குநா் டி. செங்குட்டுவன் பெற்றுக் கொண்டாா்.
மேலும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்வின்போது இத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், 23 தனியாா் மருத்துவமனைகள் என 32 மருத்துவமனைகள் இணைந்துள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, இணை இயக்குநா்(மருத்துவப் பணிகள்) லெட்சுமி, விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட மாவட்டத் திட்ட அலுவலா் ரவிசங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.