திருச்சி மாநகரில் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ள 447 கட்டடங்களை இடிக்க மாநகராட்சி அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
மாநகராட்சி பகுதிகளில் இடியும் நிலையிலுள்ள கட்டடங்கள், குடியிருப்புகள் குறித்து கண்டறியும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒரு சிலா் தாமாகவே முன்வந்து கட்டங்களை இடித்த நிலையில், பலா் சீரமைக்கவும், பழுது பாா்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனா். இதில் பொன்மலை கோட்டத்தில் 162, ஸ்ரீரங்கத்தில் 108, கோ-அபிஷேகபுரத்தில் 102, அரியமங்கலத்தில் 75 என நான்கு கோட்டங்களில் 447 கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளன.
இதில் 23 கட்டட உரிமையாளா்கள் மீது காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்ற வேண்டும். இதனை மீறும் கட்டட உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.